15/04/2020
இவ் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இன்று வரை கடற்கரையிலே நான் செல்லும் போது அதிகப்படியான ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகின்றதனை என்னால் காண முடிந்தது இது எதற்கென்று தெரியவில்லை .கடல் ஆமைகளின் வழித்தடங்களில் பயணித்துத்தான் மனிதன் பல நிலப்பகுதிகளை கண்டுபிடித்தான் என கடலியல் அறிஞர்கள்
சொல்கின்றார்கள்.கடலில் நடக்கும் உயிரியல் சுழற்சிக்கான ஒரு முக்கியமான உயிரினமாக ஆமைகள் விளங்குகின்றன.
பல்லுயிர் பெருக்கத்திற்கான சுழற்சியில் ஒரு இனம் அழிந்தால் கூட உணவுச்சங்கிலியில் பெரும் மாற்றம் நடந்துவிடுகிறது.இங்கு கடல் ஆமைகளுக்கு மட்டும் ஆபத்து இல்லை ஒட்டுமொத்த கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
கடற்கரையில் நடைபெறும் இந்த உயிரினங்களின் பேராட்ட வாழ்க்கை ஒருவேளை நமக்கு தெரியாமல் இருக்கலாம் அல்லது தெரிந்தும் நமது வேகமான வாழ்க்கையின் ஊடாக கடந்துபோகும் ஒரு செய்தியாக இருக்கலாம் ஆனால் இயற்கையின் எதிர்வினையை நாம் நேரடியாக உணரும்போதுதான் கடந்துபோன செய்திகளுக்கு பின்னால் இருக்கும் கசப்பான உண்மைகள் தெரியவரும்.
இயற்கையின் கொடிய சீற்றத்தை நேரடியாக அனுபவிக்கும் போது மனிதன் விழித்துக்கொள்வதை விட வருமுன் காப்பதற்கு என்னவழி என்பதனை பற்றி சிந்திப்பதுதான் அறிவுடைய சமூகத்திற்கான அழகான செயலாக இருக்கமுடியும்.வெறும் சட்டங்களினாலும்,விதிமுறைகளினாலும் மட்டும் இந்த சமூகத்தை ஒழுங்குபடுத்த முடியும் என்பது இயலாத காரியம்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி இரண்டரை லட்சத்துக்கு மேற்பட்ட தொன் பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கிடப்பதாக The Guardian சொலகின்றது.இந்த பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் இயங்கும் உணவுச்சங்லியை சின்னாபின்னமாக்கி வருகின்றது.உலகத்தின் குப்பத்தொட்டியாக கடலில் கொட்டப்படும் மின்கழிவுகள்,நச்சுக்கழிவுகள், எண்ணெய் கழிவுகள் அனைத்தும் இந்த பூமிப்பந்தின் புனிதத்தை சிதைத்து வருகின்றது.2050ம் ஆண்டிற்குள் கடலில் இருக்கும் மீன்களையும் மற்ற உயிரினங்களையும் விட பிளாஸ்டிக் பொருட்கள்தான் அதிகமாக இருக்கும் என ஒரு ஆய்வில் கணிக்கப்பட்டிருக்கின்றது.கடற்கரையில் ஒதுங்கும் உயிரினங்கள் அந்த அச்சத்தை உறுதி செய்கின்றது என்பதனை நாம் உணரும் காலம் வந்துவிட்டது. டைனோசர் காலத்தில் இருந்தே ஆமைகள் வாழ்ந்துகொண்டிருப்பதாக வரலாறு சொல்கின்றது.இன்று ஆமைகள் மட்டுமல்ல அரிய உயிரங்கள் அனைத்துமே அழிவின் விளிம்பில் இருப்பதனை அறிகின்றோம். அவற்றை பாதுகாப்பதற்கான அவசியத்தையும் நாம் உணர்கின்றோம்.பொருளாதாரத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி உருவாக்கப்படும் கடல்சார் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அது இயற்கைக்கு விரோதமான திட்டங்களாகத்தான் இருக்கும்.காடு தாய் என்றால் கடல் தாய்ப்பால் இந்த இரண்டும் பாதுகாப்பாக இருந்தால் தான் உயிர்ச்சங்கிலி இயல்பாக சுழலும் இல்லை என்றால் நமது கால்களுக்கு கீழே நாமே குழிவெட்டுவது நமக்கு தெரியாமலே நடக்கும்.
தேடலுடன் ஒரு தகவல்
என்னால் முடிந்தது #தர்மநாயகி