16/09/2022
*_பள்ளி செல்வதால் பரவுகிறது 'ப்ளூ' காய்ச்சல்: பெற்றோர் எச்சரிக்கையாக செயல்பட அறிவுறுத்தல்_*
"தற்போது, 'ப்ளூ' வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுவதால், கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பள்ளி செல்ல ஆரம்பித்துள்ள மழலையர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்," என, சென்னை அப்பல்லோ மருத்துவமனை குழந்தைகள் நல டாக்டர் ஜெயகுமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: திடீர் வெயில், திடீர் மழை என, சீதோஷ்ண நிலை மாறி வருவதால் வைரஸ் காய்ச்சலின் வேகம் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாண்டு காலத்தில், மழலையரும், மாணவர்களும் வீட்டுக்குள் இருந்ததால் எல்லா வகையான காய்ச்சலில் இருந்தும் பாதுகாப்பாக இருந்தனர்.தற்போது கூட்டமாக பள்ளி செல்ல ஆரம்பித்துள்ளனர். திடீர் சீதோஷ்ண மாற்றத்தால் ஏற்பட்ட வைரஸ் தாக்கம், காற்றின் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவுகிறது. குறிப்பாக மழலை பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
*_எச்.1 என்.1_*
காய்ச்சல் வந்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல், திரவ உணவுகளை நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும். போதுமான ஓய்வும் அவசியம். ஐந்து வயது குழந்தைக்கு அதிக காய்ச்சல் வந்தால் வலிப்பு வரும். குழந்தை மூச்சுவிட கஷ்டப்பட்டால், சாப்பிடாமல் இருந்தால், வாந்தி எடுத்தால், தொடர்ந்து இருமினால் மருத்துவமனையில் சேர்ப்பது நல்லது. மூன்று, நான்கு நாட்கள் கழித்து காய்ச்சல் சரியாகலாம். வைரஸில் ஒருவகை எச்.1 என்.1 வைரஸ்.இந்த வகை காய்ச்சலை பார்த்து பயப்பட வேண்டியதில்லை. காய்ச்சல் தொடர்ந்தால் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த வைரஸ் நுாறாண்டுகளாக உள்ளது. இதற்கு மருந்துகளும் உள்ளன.
*_கண்டறிவது எப்படி?_*
ஒரு வீட்டில் ஒருவருக்கு, 'ப்ளூ' காய்ச்சல் வந்தால் எல்லோருக்கும் வரும். சளி, இருமல் இருக்கும். டெங்கு காய்ச்சலில் வயிற்றுபோக்கு, இருமல் அவ்வளவாக இருக்காது. அதிக காய்ச்சல், தலைவலி, சோர்வு, காய்ச்சலில்லாத நேரம் சோர்வு இருக்கும். காய்ச்சல் குறைந்த, 3வது நாளில் சோர்வு அதிகமாக இருந்தால் டெங்கு காய்ச்சலா என, ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பிற நோய்கள் இருந்தால், காய்ச்சலின் போது மருத்துவ கண்காணிப்பு அவசியம். *_எச்.1. என்.1 வைரசுக்கு தடுப்பூசி உள்ளதால் குழந்தைகளை பாதுகாக்கலாம்..._*