16/11/2022
பத்தொன்பதாம் நூற்றாண்டு
வரலாற்று உண்மையைப் பின்புலமாகக் கொண்டு, கலைநயத்துடன், திரிபு இல்லாமல் நேர்மையுடன், மக்களை ஈர்க்கும் வகையில், வணிக ரீதியிலான திரைப்படம் எடுத்திட அசாத்தியமான துணிச்சல் அவசியம். அதே துணிச்சலுடன் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரித்து, வினையன் எழுதி இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில், ஆங்கிலத் திரை வசனங்களுடன், தற்போது வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படம்தான் ' பத்தொன்பதாம் நூற்றாண்டு '.
பத்தொன்பதாம்
நூற்றாண்டின் இறுதியில், திருவிதாங்கூர் நிலப்பரப்பில் நிலவிய சமூக அநீதிகளை எதிர்த்து, தாழ்த்தப்பட்ட ஈழவ மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும், உரிமைகளுக்கும் அரணாகத் திகழ்ந்து, போராடிய, சமூகச் சீர்திருத்தவாதியும், தற்காப்புக் கலையில் வல்லவரும், போராளியுமான ஆரட்டுபுழா வேலாயுதப் பணிக்கரின் வாழ்க்கையை, நேர்த்தியாகப் படம் பிடித்திருக்கிறது, இப்படம்.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து, பகவான் விஷ்ணுவின் திருவாபரணங்கள் திருடு போய் விடுகின்றன. காயங்குளம் கொச்சுன்னி (செம்பன் வினோத் ஜோஸ்) என்பவன் மீது சந்தேகம் எழுகிறது. திருவாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் ராம வர்மா (அனூப் மேனன்), சமஸ்தான ராணுவம் அவனைப் பிடிக்க இயலாத நிலையில், வீரன் ஆரட்டுபுழா வேலாயுதத்தின் ( சிஜு வில்சன் ) உதவியைக் கோருகிறார். அவர் தாழ்த்தப்பட்ட ஈழவ சாதியைச் சேர்ந்ததால், அவர் கைப்பற்றிக் கொண்டு வரும் நகைகள் தீட்டுப்பட்டதாகிவிடும் என்று கூறி, ராஜ குருக்களும், அரச பிரதானிகளும் அரசரைத் தடுத்து விடுகின்றனர்.
இப்படி அரசருக்கே நியாயமெனப்படுகிற விஷயங்களில் எல்லாம்கூட, இவர்கள் சாதி சடங்குகளை முன்னிலைப்படுத்தி, அவை நிறைவேறாதபடி செய்து வருகின்றனர்.
தாழ்த்தப்பட்ட சாதியினர் கோவிலுக்குள் செல்லக் கூடாது, ஏன் கோவிலுக்குள் நடக்கும் கதகளி நிகழ்வுகளை வெளியே இருந்துகூடப் பார்க்கக் கூடாது, மேல் ஜாதியினருக்கு 36 அடி தொலைவில் அல்லாது அருகே நின்று பேசக்கூடாது, விருதோ பொருளோ அளிக்கும் அரசரேகூட, அவற்றை அவர்களிடம் கையில் வழங்கக் கூடாது, பெண்கள் மேலாடை அணியக் கூடாது, கீழாடையைக் கணுக்கால் மறைய அணியக் கூடாது, பெண்கள் மூக்குத்தி அணியக் கூடாது (அவ்விதம் அவர்கள் அணிந்தால் அங்கங்கள் வெட்டப்படும்), ஆண்கள் தலைப்பாகை அணியக் கூடாது போன்ற கொடுமைகள், ஆதிக்க சாதியினரால் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் எதிர்த்து ஆராட்டுபுழா வேலாயுதப் பணிக்கர் ஒருபுறமும், நங்கெல்லி (காயாடு லொஹர்) என்கிற பெண் போராளி மறுபுறமும் போராடிக் கொண்டிருந்தனர்.
நகைகள் திரும்பக் கிடைத்தனவா, ஆதிக்க சாதியினரால் தாழ்த்தி ஒதுக்கப்பட்ட ஈழவ மக்களுக்கு ஆதரவான இவர்களது போராட்டம் வெற்றி பெற்றதா என்பதுதான், 'பத்தொன்பதாம் நூற்றாண்டு' படத்தின் மொத்தக் கதை.
ஆரட்டுபுழா வேலாயுதப் பணிக்கரான கனமான பாத்திரத்தில் சிஜு வில்சன், தோற்றப் பொலிவு, சண்டைக் காட்சிகள், தீர்க்கமான பேச்சு, நேருக்கு நேர் நின்று விவாதிக்கும் துணிச்சல், அழுத்தமான நடிப்பு என, கச்சிதமாகப் பொருந்துகிறார். நங்கெல்லி பாத்திரம் ஏற்றுள்ள
காயாடு லொஹர், பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாகவே நடித்துள்ளார். முலை வரி கட்ட மறுக்கும் நங்கெல்லியை அடித்துத் துவைத்துச் சித்திரவதை செய்ததின் உச்சமாக அவள் எடுக்கும் முடிவு நெஞ்சைப் பதற வைக்கும். அதேபோன்று தன் விருப்பத்திற்கு மாறாக உறவு கொள்ள முயலும் மிகவும் வயதான ஈஸ்வரன் நம்பூதியை சாவித்திரி தம்புராட்டி எதிர்கொள்ளும் விதமும் மயிர்கூச்செரிய செய்யும்.
இவர்களைத் தவிர, அனூப் மேனன், செம்பன் வினோத் ஜோஸ், பூனம் பாஜ்வா (அரசி), தீப்தி சதி (சாவித்திரி தம்புராட்டி), சுதேவ் நாயர் (படவீடன் நம்பி) சுரேஷ் கிருஷ்ணா (கைமால்) விஷ்ணு வினய் ( கண்ணன் குரூப் ), கோகுலன் கோபாலன் (பெருமாள்), இந்திரன்ஸ் (கீளு), அலன்சியர் லே லோபஸ் (ராமன் தம்பி), மாதுரி பிரகன்சா (காத்தா), ஜாஃபர் இடிக்கி (கேஷுன்னி), சுதிர் கரமனா (பாச்சுபணிக்கர்) போன்ற பலரும் தத்தம் பாத்திரப் படைப்பை முழுதுமாக உள்வாங்கி, சிறப்பாகவே தங்களது பங்களிப்பை வழங்கி உள்ளனர்.
" அப்போ காயங்குளம் கொச்சுன்னி திருவாபரணங்களை தொட்டபோது கலங்கமோ தீட்டோ ஆகாதோ ? " ( அரசன் ),
" இதை நீ எடுத்துக்கோ, உன்னோட மருத்துவ செலவுக்காகப் பயன்படுத்திக் கொள். கொச்சுன்னியால பலமா அடி வாங்கி இருக்கே, இல்லியா ? " ( வேலாயுதம் ),
" பெண்கள மதிக்காத இந்த பூமில நான் வாழ விரும்பல " ( நங்கெல்லி ) இப்படி
வசனங்கள் சில நெஞ்சைத் தொடுகின்றன.
சிறப்பான ஒளிப்பதிவும் (ஷாஜி குமார்), அருமையான பின்னணி இசையும் (சந்தோஷ் நாராயணன்), பாடல்களின் இனிமையும் (ஜெயச்சந்திரன்), கச்சிதமான படத்தொகுப்பும் ( விவேக் ஹர்ஷன் ) வினயனின் அற்புதமான இயக்கத்தை, கூடுதலாக, மதிப்புக் கூட்டிய இயக்கமாக்கி உள்ளன.
தீண்டாமையும், தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான சமூக அநீதிகளும் முற்றிலுமாக ஒழியாமல், இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்தாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவை ஓரளவு ஒடுங்கிப் போனதற்குக் காரணமாகத் திகழ்ந்த, சொற்ப காலமே வாழ்ந்து சாதித்த, பேசப்பட வேண்டிய ஆனால் பேசப்படாத சமூகச் சீர்திருத்தவாதியும், போராளியுமான ஆரட்டுபுழா வேலாயுதப் பணிக்கருக்கு, வினயனின் 'பத்தொன்பதாம் நூற்றாண்டு' மகத்தானதொரு அஞ்சலி !
https://youtu.be/7JUdNz9oM2s
நன்றி... சூரியகுமார்