17/06/2026
திமுக சமீபத்தில் செய்த மிகப்பெரிய வரலாற்று பிழை என்னவென்றால் விஜய்யை ஆட்சியில் அமரவிட்டது. இது சிறுபிழையோ, மீட்டுவிடக்கூடிய தவறோ அல்ல. கிட்டத்தட்ட முதல்வன் படத்தின் காட்சிதான் அரங்கேறியிருக்கிறது. அதில் முதல்வரான அரசியல்வாதி ரகுவரன், தன்னை போல் இந்த சாதாரண மனுதன் அர்ஜூனால் ஆட்சியை திறம்பட நடத்த முடியாது, அதன் பிரச்சினைகள் நாற்புறமும் இருந்து ஒரே நேரத்தில் தாக்கும் போது அழுத்தம் தாங்காமல் ஓடி விடுவார் என நினைத்து ஒரு நாள் முதல்வராக்கிவிடுவார். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக அந்த ஒருநாளில் சில தீர்வுகள், நடவடிக்கைகள் என அதிரடியாக எடுத்தது மட்டுமல்லாமல் அதை அக்காலத்தின் ரீல்சான டிவி ஒளிபரப்பு மூலம் மக்களுக்கு கடத்தி மக்களிடம் நன்மதிப்பும் பெற்றுவிடுவார், பின்னர் நிரந்தர முதல்வராகிவிடுவார்.
அதே கதையாகிவிட்டது இன்று நாம் பார்க்கும் நிகழ்வுகள். விஜய் கொஞ்ச காலம் ஆளட்டும், அவர் ஆட்சி நடத்த தெரியாமல் ஆள்வார், அழுத்தம் தாங்காமல் மிரள்வார், மக்கள் இதை பார்த்து இவர்களுக்கு ஆளத்தெரியவில்லை, நாம் பழையபடி திமுகவுக்கே ஓட்டு போட்டுவிடுவோம் என நினைத்து மறுபடியும் அடுத்த தேர்தலில் தமக்கே ஓட்டுபோடுவார்கள் என நினைத்தார்கள் போல. அதனால்தான் தங்களது கூட்டணி கட்சியினரை தாரைவார்த்து ஆட்சியில் அமர்த்தி கொடுத்தனர். இதை நாம் சொல்லவில்லை, திமுக தலைவரும் இளைய தலைவருமே சொன்னது. ஆனால் நடந்தது என்னவோ எதிர்மாறாக. முதல் நாள் முதல் கையெழுத்தாக மக்களின் பிரதான பிரச்சினைகளான பெண்கள் பாதுகாப்பு, போதை தடுப்பு போன்றவற்றை தேர்ந்தெடுத்தது நல்லதொரு மாஸ்டர் ஸ்ட்ரோக். அடுத்து கமிஷன் வேண்டாம் என்ற அறிவிப்புகள், துறைரீதியான ஊழலுக்கு எதிரான சில நடவடிக்கைகள், காசுவாங்காமல் பள்ளி அனுமதிகள், ட்ரான்ஸ்ஃபர்கள் என அடுத்தடுத்து ஸ்கோர் செய்துகொண்டே போகிறார்கள். ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யமுடியாது, எத்தனை நாட்கள் இப்படி போகிறார்கள் பார்போம், என எதிர்கட்சிகள் என்ன சொன்னாலும் அது இங்கு எடுபடாது. புதிதாக வருபவன் தாமதாக ஊழல் செய்ய பழகுவான், கொஞ்சமாக செய்வான் என ஏற்கனவே மக்கள் சொல்வார்கள், அதே புள்ளிக்குதான் சமூகத்தின் பொதுபுத்தியில் இது பதியும். அதாவது பிற்காலத்தில் இவர்கள் ஊழலே செய்தாலும் உனக்கு அவன் குறைவுதான் என மக்கள் சொல்வார்கள். இப்போதே பொதுமக்கள் பலர், விஜய் ரசிகர் அல்லாதோரும் இந்த ஆட்சி பரவாயில்லையே என பேசத்தொடங்கிவிட்டனர். தொடர்ந்தால் நிரந்தர முதல்வர்தான்.
ஆட்சிக்கு எதிராக மின்தடை போன்ற சில விஷயங்கள் சொல்லலாம், ஆனால் அதையும் மக்களே வேறு மாதிரி புரிந்து கொள்கிறார்கள். இதை வேண்டுமென்றே அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த சிலர் செய்கின்றனர் என மக்களே யோசிக்கிறார்கள். அதற்கேற்றவாறு எல்லா மின்தடை செய்திகள், பதிவுகளில் உபிகள் கதறு கதறு எங்களுக்கு ஓட்டு போடவில்லை அல்லவா? அனுபவி என்று பதில் கமெண்ட் போட்டு குதூகலிக்கிறார்கள், இதுவும் மக்களிடம் தவறாகதான் சென்று சேரும். மொத்தத்தில் பெரிய ஆட்சி அதிருப்தி இதுவரை இல்லை.
திமுக விஜய்யை ஆட்சியில் அமர்த்த முடிவெடுக்க, கவர்னர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் கூட்டணி கட்சிகளை அனுப்பினோம் என்றார்கள். இந்த கருத்தை யார் அவர்கள் மனதில் புகுத்தினார்கள் தெரியவில்லை, ஒருவேளை கூட்டணி மாற தயாராக இருந்த கூட்டணி கட்சியினரே புகுத்தியிருக்கலாம். அப்படியே கவர்னர் ஆட்சி வந்திருந்தால் என்னவாகியிருக்கும்? பாஜக மறைமுகமாக ஆட்சி செய்யுமா? அந்த அளவுக்கு தெளிவான தலைவர்கள் தமிழகத்தில் இல்லை, இது இன்னொரு அதிகாரிகள் ஆட்சியாகதான் இருந்திருக்கும். தவிர இதையே தங்கள் பிரச்சாரமாக சொல்லி அடுத்த தேர்தலில் திமுக வென்றிருக்கலாம். அந்த வாய்ப்பை இழந்துவிட்டார்கள். விஜய் ஆட்சியா, கவர்னர் ஆட்சியா ? என்றால் கவர்னர் ஆட்சியை தேர்ந்தெடுப்பதே திமுக அதிமுகவுக்கு நீண்டகால நோக்கில் லாபகரமாக இருந்திருக்கும். ஆனால் விஜய் ஆட்சியை தேர்ந்தெடுத்ததன் மூலம் திமுக அல்லது அதிமுகவில் ஒன்று மறைய வேண்டிய சூழலுக்கு எடுத்துவந்துவிட்டனர்.
விஜய் ஆட்சிக்கே வந்திருக்காவிட்டால் அவர் ஆளக்கூடிய கட்சியாக மக்கள் மனதில் பதிந்திருக்க மாட்டார். தமிழகத்தில் ஆளக்கூடிய கட்சிகள் என மக்கள் மனதில் பதிந்திருப்பது திமுக அதிமுக மட்டும்தான். அந்த இடத்திற்கு வந்திருக்கக்கூடிய மதிமுக, தேமுதிக, தமாக, மநீம போன்ற கட்சிகள் ஒரிரு தேர்தல்களில் ஆட்சியை பிடிக்காமல் போனதும் உபகட்சிகள் என்ற மணக்கணக்கில் சேர்த்துவிட்டனர். இங்கு ஆட்சியில் அமர்வது முக்கிய வரலாற்று தருணம். விஜய் இன்று ஆட்சியில் அமராவிட்டால் அதிகபட்சம் திமுக அதிமுக சதி செய்து அவரை கெடுத்துவிட்டனர் என மக்கள் கொதிக்கலாம், ஆனால் ஒருவருட கவர்னர் ஆட்சியில் இதை மறந்துவிடுவார்கள், தேர்தலுல்கு முன் 6 மாதங்களில் நடப்பவை வைத்து மாற்றி ஓட்டுபோடுவார்கள், அதனால் இந்த பூச்சாண்டிக்கே பயந்திருக்க கூடாது.
இப்போது என்னவாயிற்று, விஜய்யும் ஒரு முதல்வர் வேட்பாளர், தவெகவும் ஒரு ஆளுங்கட்சியாக கூடிய கட்சி என மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இனி அந்த இன்னொரு இடத்துக்குதான் திமுக, அதிமுக சண்டையிட வேண்டும். திமுக அதை பிடித்துவிட்டது என எண்ணியே அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை என அதன் தலைவர்கள் தவெகவுக்கு தாவுகிறார்கள். விஜய் ஆட்சிக்கு வராமல் கவர்னர் ஆட்சி வந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது, திராவிட கட்சிகளின் ஆதிக்கம் தொடர்ந்திருக்கும்.
#பகிர்வு